Sunday, September 12, 2010

பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா இன்று காலமானார்


பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ண லதா இன்று காலமானார். நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ஸ்வர்ணலதா (37). இவர் 1982ம் ஆண்டு வெளியான நீதிக்கு தண்டனை படத்தின் மூலம் "சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா" என்ற பாரதியாரின் பாடலைப் பாடி இசைஞானி இளையராஜாவால் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகபடுத்தப்பட்டார்.

எண்பதுகளின் முதல் பகுதியிலேயே அறிமுகமாகியிருந்தாலும் 1990ம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படத்தில் இவர் பாடிய ஆட்டமா... தேரோட்டமா... பாடல்தான் இவரை பிரபலபடுத்தியது. அதேபோல அதற்கடுத்து சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற "போவோமா ஊர்கோலம்... பாடல் ஸ்வர்ணலதாவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இப்பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருது கிடைத்தது. 1996ம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" பாடலுக்குகாக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பஞ்சாபி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கும் ஸ்வர்ணலதாவின் குரலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தனது இனியைமான குரலால் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஸ்வர்ணலதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். சமீப காலமாக நுரையீரல் பாதிப்பால் கஷ்டப்பட்டு வந்த ஸ்வர்ணலதா இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை வீட்டில் இருந்தபோது திடீரென வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகி்ச்சை அளித்தும் பலனின்றி காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஸ்வர்ணலதாவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வர்ணலதாவின் ஹிட்ஸ்களில் சில...

ஆட்டமா தேரோட்டமா (கேப்டன் பிரபாகரன்)
போவோமா ஊர்கோலம் (சின்ன தம்பி)
மாசி மாசம் ஆளான பொண்ணு (தர்மதுரை)
அடி ராக்கம்ம கையத் தட்டு (தளபதி)
அந்தியில வானம் (சின்னவர்)
உசிலம்பட்டி பெண்குட்டி (‌ஜென்டில் மேன்)
மலைக்கோயில் வாசலிலே... (வீரா)
மாடத்திலே கன்னி மாடத்திலே (வீரா)
என்னுள்ளே.. என்னுள்ளே (வள்ளி)
உளுந்து விதைக்கையிலே... (முதல்வன்)
எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலைபாயுதே)
முக்காலா முக்காபுலா (காதலன்)
பூங்காற்றிலே உன் சுவாசத்தில்... (உயிரே)
அக்கடா நாங்க (இந்தியன்)
அன்புள்ள மன்னவனே (மேட்டுக்குடி)
குச்சி குச்சி ராக்கம்மா (பம்பாய்)
மெல்லிசையே... (மிஸ்டர் ரோமியோ)
கட்ட கட்ட நாட்டு கட்ட (ஜெமினி)
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா (உடன்பிறப்பு)
ஒரு பொய்யாவது சொல் கண்ணே (ஜோடி)
அஞ்சாதே ஜீவா (ஜோடி)
காதலெனும் தேர்வெழுதி... (காதலர் தினம்)
முத்தே முத்தம்மா... (உல்லாசம்)
மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன் (மே மாசம்)..

No comments:

Post a Comment